Friday, July 30, 2010

நான் அவனல்லன்! - வ.ந.கிரிதரன் -

சென்னையில் இயங்கும் மணிமேகலை பிரசுரம் 'முத்தமிழில் நல் முத்துக்கள்' என்றொரு நூலினை வெளியிட்டுள்ளார்கள். இதன் ஆசிரியர்களாக V.N.கிரிதரன், S.N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். நீண்டகாலமாக வ.ந.கிரிதரன் (V.N.Giritharn) என்னும் பெயரில் எழுதிவருகின்றேன். மேற்படி நூலினை நான் எழுதவில்லை. ஏனென்றால் நான் அவர்களுக்கு எனது ஆக்கங்கள் எதனையும் வெளியிடுவதற்குக் கொடுக்கவில்லை. மேலும் மேற்படி நூலினை நான் இதுவரை வாசிக்கவில்லை. இணையத்தில் விருபா தளத்தில் கண்ட நண்பரொருவர் கூறித்தான் தெரிய வந்தது. நான் எனது ஆக்கங்கள் எதனையும் அவர்களுக்குப் பதிப்பிக்கக் கொடுக்காததனால் அந்த நூலிலுள்ள படைப்புகளை எழுதியவர் இன்னுமொரு கிரிதரனாக இருக்க வேண்டுமென நினைக்கின்றேன். அல்லது எனது ஆக்கங்கள் சிலவற்றை இணையத்திலிருந்து எடுத்து வெளியிட்டார்களோ என்பதும் எனக்குத் தெரியாது. மேற்படி நூலினை இதுவரையில் பார்க்காததனால் இரண்டிற்கும் சாத்தியங்களுள்ளதால், மேற்படி நூலினை வாசித்தவர்கள் யாராவதுதான் அறியத்தர வேண்டும். இங்கு நான் இந்த விடயத்தைத் தெளிவு படுத்துவதற்குக் காரணமுண்டு. அது பெயர்க் குழப்பம்தான். தமிழ் இலக்கிய உலகில் என்னை அறிந்தவர்கள் பெயரைப் பார்த்ததும் நான் எழுதியதாகக் கருதிவிடுவார்கள். மணிமேகலை பிரசுரம் போன்ற பதிப்பகங்கள் நூல்களை வெளியிடும்போது இவ்விதம் பெயர்க் குழப்பங்கள் ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பெயரை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது தேவையற்ற பெயர்க் குழப்பங்களைத் தவிர்க்கும். மேலும் மணிமேகலை பிரசுரத்தினர் மேற்படி பெயரில் மேலும் எத்தனை நூல்களை வெளியிட்டிருக்கின்றார்களோ தெரியவில்லை. நான் எனது நூல் எதனையும் மணிமேகலை பதிப்பகம் மூலம் இதுவரை வெளியிடவில்லை என்பதை அறியத்தருகின்றேன். ஒரு பதிவுக்காகவும், விளக்கத்திற்காகவும் இதனை அறிவிப்பது அவசியமானதென்று கருதுகின்றேன். சங்கர்லால், தமிழ்வாணன் எனத் துப்பறியும் நிபுணர்கள் நடமாடும் நாவல்களைப் படைத்த தமிழ்வாணனின் புதல்வர்கள் நடாத்தும் நிறுவனத்தால் ஏற்கனவே நீண்டகாலமாக எழுதும் என் பெயரைப் பாவித்து நூல் வெளியிடுவதில் விளையக் கூடிய தேவையற்ற குழப்பங்களை உணரமுடியாமலிருப்பது வியப்பிற்குரியது. தந்தையின் நாவல்களில் வருவதைப்போல் சிறிது துப்பறிந்திருந்தால் ஏற்கனவே மேற்படி பெயரில் ஒருவர் எழுதுவதைக் கண்டுபிடித்திருக்கலாம். தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

- வ.ந.கிரிதரன் -
ngiri2704@rogers.com

********************************

இது பற்றி மணிமேகலை பதிப்பகத்தாருக்கு அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து (அவர்களது பதில் இன்னும் வரவில்லை) சில பகுதிகள்:

வணக்கம் பதிப்பகத்தாரே,
உங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட 'முத்தமிழில் நல் முத்துகள்' என்னும் நூலின் ஆசிரியர்களிலொருவராக V.N.கிரிதரன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக வ.ந.கிரிதரன் (V.N.Giritharan) எழுதி வருகின்றேன். இவ்விதமாக நீங்கள் V.N.கிரிதரன் என்னும் பெயரைப் பாவிப்பது பெயர்க் குழப்பங்களை ஏற்படுத்துமென்பதால் எதிர்காலத்தில் கிரிதரன் போன்ற பெயர்களைப் பாவிப்பீர்களென்றால் பெயர்க்குழப்பங்களை அதன் மூலம் தவிர்த்துக்கொள்ளலாம். இதனை நீங்கள் கருத்தில் கொள்வீர்களென நினைக்கின்றேன். மேலும் மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள V.N.கிரிதரன் பற்றிய மேலதிக விபரங்களைத் தந்துதவிட முடியுமா?

- வ.ந.கிரிதரன்:

No comments: