Friday, June 19, 2009

'உலகக் கிராமத்து' மக்களே! - வ.ந.கிரிதரன் -

அங்கே
எனது மண்ணில்
மக்கள் மெளனித்திருக்கின்றார்கள்.
மெளனமாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இரவும், பகலுமென
ஓடியோடி அவர்கள் உருக்குலைந்து விட்டார்கள்.
நிலப்பொந்துகளுக்குள் வாழும் முயல்களுக்கோ
அல்லது மண்ணெலிகளுக்கோ கிடைக்கும்
தூக்கத்தைக் கூட , நிம்மதியைக் கூட
அவர்கள் இழந்து விட்டிருந்தார்கள்.
சிட்டுக் குருவியொன்றுக்கிருக்கக் கூடிய
குறுகிய மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தைக் கூட
அவர்களால் அனுபவிக்க முடியாதவாறு
அவர்கள் நிலத்துக்கடியில் புதைந்து கிடந்தார்கள்.
இப்பொழுது வேலிகளுக்குள் வதைபட்டுக்
கிடக்கின்றார்கள்?

குண்டு மழையில் மானுட நாகரிகத்தின்
அற்புதங்களையெல்லாம், பெருமைகளையெல்லாம்
அவர்கள் இழந்து விட்டிருந்தபோது.
மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?
அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.
நாளும், பொழுதும், கணமும்
அவர்கள் சீர்குலைக்கப்பட்டபோது
மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?
அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.
எல்லோரும் மெளனித்திருந்தார்கள்.
ஓரிருப்புக்குரிய கெளரவத்தை, மாண்பினை,
மகிழ்ச்சியினையெல்லாம்
அவர்கள் இழந்து, தெருத்தெருவாக,
காடு மேடு, நீர்நிலைகளினூடாகவெல்லாம்
ஓடிக்கொண்டிருந்த போதெல்லாம்
மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?
அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.

அங்கங்கள் சிதைக்கப்பட்டன; உயிர்கள்
வதைக்கப்பட்டன; கற்பனைகள், கனவுகள்
நொருக்கப்பட்டன; இருந்தும் அனைவரும்
திரைப்படமொன்றினைப் பார்ப்பதுபோல்
மெளனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அனைவருக்கும் புரிந்திருந்ததா?
சரி எது? பிழை எது? என்பதெல்லாம்.
இருந்தும் அவர்களை நகர விடாமல்
எவை கட்டிப் போட்டிருந்தன?

கிராமங்களை அன்பினூற்றென்று சொன்ன
புண்ணியமான மானுடரே?
'உலகக் கிராமங்களில்; ஏன் அவை
சிதைந்து போயின என்பதற்கான
காரணங்களைக் கூறுவீரா?
எல்லைகளற்ற , குறுங் கிராமத்து
மக்களே! எல்லைகளால்.
இன்னும் எத்தனை காலம்தான்
நீங்கள் குறுகிக் கிடக்கப் போகின்றீர்கள்?
இன்னும் எததனை நாட்களுக்குத்தான்
மெளனித்திருக்கப் போகின்றீர்கள்?
இன்னும் எததனை நாட்களுக்குத்தான்
மெளனித்திருக்கப் போகின்றோம்?

ngiri2704@rogers.com

No comments: