Sunday, September 17, 2006

பிள்ளைப் பிராயத்திலே...... 1

நான் மீன் பாடும் தேனாடாம் மட்டுநகர் சென்ற கதையிது. அப்பொழுது எனக்கு வயது பன்னிரண்டுதான். அம்மண்ணில் இருந்த காலகட்டமும் நான்கோ ஐந்து நாட்கள்தான். இருந்தாலும் அந்தக் குறுகிய பயணத்திற்குக் கூட ஓரிலக்கிய அந்தஸ்திருப்பதை இப்பொழுது
நினைத்தாலும் உணர முடிகிறது. அப்பொழுது நான் வவுனியாவில் என் பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். என் அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அப்பொழுதுதான் நான் எழுத்துலகில் மெல்ல மெல்ல காலடி வைத்துக் கொண்டிருந்தேன். எனது 'பொங்கல்' பற்றிய சிறுவர் கவிதையொன்றினை 'பொங்கலோ பொங்கல்' என்னும் தலைப்பில் சுதந்திரன் தனது பொங்கல் மலரில் பிரசுரித்திருந்தது (இறுதியில் அச்சிறுவர் கவிதையினை நீங்கள் வாசித்து மகிழுங்கள்). உயர்வகுப்பு மாணவர்களுக்காக ஈழநாடு வாரமலர் நடாத்திய 'தீபாவளி இனித்தது' என்னும் கட்டுரைப் போட்டிக்காக ஆறாம் வகுப்பு மாணவனாக நான் இனிக்க இனிக்க எழுதி அனுப்பிய கட்டுரையினைப் பிரசுரிக்கா விட்டாலும் பாராட்டி என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது ஈழநாடு. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம், தினமணிக் கதிர், அம்புலிமாமா, பொம்மை, பேசும்படம், தினமணி, ராணி, ராணுமுத்து, மற்றும் ஈழத்துப் பத்திரிகைகளான சுதந்திரன், ஈழநாடு, அந்தனிசிலின் 'தீப்பொறி' என்று வீடு முழுவதும் பத்திரிகை, சஞ்சிகைகளால் அப்பா நிறைத்து வைத்திருந்தார். அனைத்துச் சஞ்சிகைகளினதும் தீபாவாளி மலர்களையெல்லாம் அப்பா வாங்கியிருந்தார். அவை தவிர பொன்மலர், பால்கன், வேதாள மயாத்மாவின் இந்திரஜால் காமிக்ஸ் எனப் பல்வேறு 'காமிக்ஸ்' வெளியீடுகளையும் அப்பா மறந்திருக்கவில்லை. இவை தவிர ராஜாஜியின் 'வியாசர் விருந்து' (மகாபாரதம்), 'சக்கரவர்த்தித் திருமகன்' (இராமாயணம்), சேக்கிழாரின் பெரியபுராணம், பாரதியார் கவிதைகள் என மேலும் பல நூல்கள்.


நான் அம்புலிமாமாக் கதைகளிலிருந்து அன்றைய ஜனரஞ்கக எழுத்தாளச் சிற்பிகளின் படைப்புகளுக்குள் என்னை மெல்ல மெல்ல மூழ்கடிக்கத்த தொடங்கியிருந்தேன். அப்பொழுது கல்கியில் தொடராக வெளி வந்து கொண்டிருந்த பொன்னியின் செல்வனின் முதற்பகுதியின் இடைப்பகுதியிலுள்ள ஓர் அத்தியாயத்தின் மூலம் தொடர்கதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அந்த அத்தியாயத்தில் சம்புவரையரின் மகனான கந்தமாறன் முதுகில் குத்தப்பட்டு விடுகின்றான். நண்பனான வந்தியத்தேவந்தான் அதனைச் செய்ததாக அவன் சந்தேகமடைகின்றான். அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஆர்வத்தைத் தூண்டும் மர்ம முடிச்சுகளுடனும், நகைச்சுவையுடனும் கல்கி பொன்னியின் செல்வனைப் படைத்திருந்தார். அந்நாவலில் வரும் வந்தியத்தேவன் பாத்திரம், பூங்குழலி, பாத்திரம், ஆழ்வார்க்கடியான் பாத்திரம், குந்தவை பாத்திரம், வானதி பாத்திரம் இவை எல்லாமே நன்கு வாசிப்பவர்கள் மனதை விட்டகலா வண்ணம் படைக்கப்பட்டிருந்தன. சம்புவரையரின் அரண்மனையில் நடக்கும் முக்கியமானதோர் அரசியல் ஆலோசனைக் கூட்டத்தினை நள்ளிரவில் மறைந்திருந்து அவதானித்துக் கொண்டிருக்கும் வந்தியத்தேவன், அச்சமயம் மதில்மேலாக எட்டிப்பார்த்து அவற்றைக் கவனிக்கும் ஆழ்வார்க்கடியான், 'அலை கடலும் ஓய்ந்திருக்க, அகக் கடல்தான் பொங்குவதேன' எனப் பாடிக்கொண்டே ஓடத்தை ஓட்டிச் செல்லும் பூங்குழலி, நிதானமும், அறிவும் நிறைந்த குந்தவைப் பிராட்டியார், எதற்கெடுத்தாலும் பயந்து மயங்கும் கொடும்பாளூர் இளவரசி வானதியென இன்றும் கூட மறக்க முடியாத வகையிலான பாத்திரங்கள். நாவலில் வரும் சம்பவங்களைக் கூடச் சுவையாகக் கல்கி விபரித்திருப்பார். ஒரு முறை குடந்தை சோதிடரிடம் குந்தவைப் பிராட்டியாரும் கொடும்பாளூர் இளவரசியும் சோதிடம் கேட்கச் சென்றிருப்பார்கள். அப்பொழுது குந்தவைப் பிராட்டியாருக்குச் சோதிடம் பார்க்கும் சோதிடர் அவளது வருங்காலக் கணவன்பற்றிக் குறிப்பிடும்போது 'கூரையைப் பிய்த்துக் கொண்டும் வருவான்' எனக் குறிப்பிடுவார். அச்சமயம் வழக்கம்போல் ஏதோவொரு சிக்கலுக்குள் மாட்டிகொண்டு வரும் வாணர்குலத்து இளவரசன் வந்தியத்தேவ்ன் அரக்கப் பரக்கப் புயலென சோதிடரின் குடிசைக்குள் நுழைவான். அப்பொழுது சோதிடர் கூறியதையும் அவனது வரவினையும் ஒப்பிட்டு நோக்கி ஆராயும் குந்தவை பிராட்டியாரின் இதழ்களில் மெல்லியதொறு முறுவல் படரும். ஓவியர் வினு அதற்கொரு அழகான ஓவியம் வரைந்திருப்பார். எம்மிதழ்களிலும்புன்னகையினைத் தோற்றுவிக்கும் சம்பவம். இதுபோல் பற்பல சம்பவங்களை அழகாகப் பின்னி அந்நாவலைக் கல்கி படைத்திருந்தார்.

'பொன்னியின் செல்வனை'த்தவிர அப்பொழுது நான் விரும்பி வாசித்த ஏனைய படைப்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: பி.வி.ஆரின் 'மணக்கோலம்', 'கூந்தலிலே ஒரு மலர்', ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்',
'பொன் விலங்கு', 'நித்திலவல்லி', அகிலனின் 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி', சாண்டியல்யனின் 'ராஜமுத்திரை', ஜெகசிற்பியனின் 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்', 'நந்திவர்மன் காதலி', 'மதுராந்தகி'. கலைஞரின் 'ரோமரிப் பாண்டியன்'. உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' இன்னுமொரு மறக்க முடியாத படைப்பு. அதே உமாசந்திரன் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வெளிவந்த இன்னுமொரு நல்லதொரு நாவல் 'முழு நிலா'. அதில்வரும் உப்பிலி நல்லதொரு பாத்திரம். கோபுலுவின் ஓவியங்களுடன் அழகான தொடராக வெளிவந்து கொண்டிருந்த அந்நாவல் என் தந்தையாருக்கு மிகவும் பிடித்தவைகளிலொன்று. இவற்றுடன் ஜெயகாந்தனின் படைப்புகளையும் மறந்திட முடியாது. 'ஆடும் நாற்காழிகள் ஆடுகின்றன்', 'கோகிலா என்ன செய்து விட்டாள்', 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'அக்கினிப் பிரவேசம்', 'ஒரு வீடு பூட்டிக் கிடந்தது' , 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்' என ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் முழுநாவல்களும், சிறுகதைகளும் (முத்திரைக் கதைகளாகவும்), தொடர்கதைகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்த சமயமது. அதே சமயம் தினமணிக் கதிரில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. ஜெயகாந்தனின் 'ஒரு பிடி சோறு' சிறுகதைத் தொகுப்பிலிருந்து 'ஒரு பிடி சோறு', 'பிணக்கு', 'மவுண்ட் ரோடு மைக்கல்', 'டிரெடில்', 'ராசா வந்திட்டாரு' போன்ற கதைகளை தினமணிக் கதிர் மீள்பிரசுரம் செய்திருந்தது.


அப்பொழுது தினமணிக்கதிரில் வெளிவந்த தொடர்கதைகளில் ஞாபகத்திலுள்ள இன்னுமொரு தொடர்கதை லட்சுமி சுப்ரமணியத்தின் 'பொன் மாலைப் பொழுது'. சோமு என்னுமொரு நடுத்தர வயதுள்ள ஒருவரின் கடந்தகால அனுபவங்களை காதலையுள்ளடக்கி விபரிக்கும் கதையென்று எண்ணுகின்றேன். ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளிவந்திருந்தது. மணியன் அப்பொழுது மிகவும் புகழ்பெற்ற ஜனரஞ்சக எழுத்தாளர். 'இதய வீணை' , 'நெஞசோடு நெஞ்சம்', 'நீரோடை', 'உன்னை ஒன்று கேட்பேன்', 'உண்மை சொல்ல வேண்டும்', 'காதலித்தால் போதுமா' எனப் பல தொடர்களை ஆனந்த விகடன் வெளியிட்டது ஓவியர் மாயாவின் சித்திரங்களுடன். ஆனால் ஏனைய எழுத்தாளர்களைப் போல் இவரது படைப்புகள் இன்றுவரை நின்றுபிடிக்கவில்லை. வெளிவந்த காலத்தில் பரபரப்பூட்டியதோடு சரி. அவரைப் போல் இன்னுமொரு அன்று அதிகமாக எழுதி இன்று மறக்கப்பட்டுவிட்ட இன்னுமொரு எழுத்தாளர் பி.எம்.கண்ணன். கலைமகளில் வெளிவந்த படைப்புகளில் இன்னும் ஞாபகத்திலுள்ள தொடர்கதைகளாக முக்கோணக் காதலை மையமாக வைத்துப் புனையப்பட்ட 'கடலும் மலையும்'. இந்நாவல் கலைமகள் நாவல் போட்டியொன்றில் முதற் பரிசு பெற்ற நாவல். பாவை பார்வதி எழுதியது. அந்நாவலில் வரும் சூரி என்னும் பாத்திரப் படைப்பு இன்னும் ஞாபகத்திலுள்ளது. கடலும் மலையும் போன்ற இரு ஆளுமைகளைக் கொண்ட ஆண்களிருவரில் ஒருவரை நாயகி தேர்ந்தெடுப்பது பற்றிய முக்கோணக் காதற்கதை. கலைமகளில் தொடராக இன்னுமொரு நாவல் கல்பனா எழுதி வெளிவந்து கொண்டிருந்தது. 'யுகசந்தி' என்பது அதன் பெயர். ஆற்று வெள்ளப் பெருக்குடன் ஆரம்பமாகும் நாவல் என்பதைத்தவிர தற்போது வேறெதுவும் ஞாபகத்திலில்லை. இன்னுமொரு கலைமகள் நாவல் கே.பி.நீலமணியின் 'புல்லின் இதழ்கள்'. இசையை மையமாக வைத்துப் பின்னப்பட்ட, அப்பொழுது வாசிக்கும்போது மனதை வெகுவாகக் கவர்ந்த நாவலென்பதைத் தவிர வேறுதுவும் ஞாபகத்திலில்லை. ஸ்ரீவேணுகோபலனின் 'நீ நான் நிலா' அப்பொழுது கதிரில் தொடராக வெளிவந்த இன்னுமொரு நாவல். இதுவும் நாயகன், பல பெண்களென விரியுமொரு காதற்கதை. அப்பொழுது தினமணிக்கதிர் இலவச இணைப்பாக வெளிவந்த ஸ்ரீ. வேணுகோபாலனின் 'நடு வழியில் ஒரு ரெயில்' இப்பொழுது வாசித்தாலும் சுவையூட்டுமொரு குறுநாவல். அதில்வரும் அப்பாவி நாயகன், பதினாறு வயதினிலே சப்பாணியையொத்தவன், அவனை விட்டுப் பிரிந்து இன்னுமொருவனுடன் வாழும் அழகேயுருவான மனைவி வசுந்தரா, இப்பாத்திரங்களை உள்ளடக்கிய கதை. நடுவழியில் நின்று விட்ட ரெயிலை 'அப்பாவி' நாயகன் தன் சொந்த அனுவங்களனடிப்படையில் இயங்கச் செய்து பயணிகளைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறான்; அந்த ரெயிலில் பயணிக்கும் அவனது முன்னாள் அழகிய மனைவி 'நீங்கள் எவ்வ்வளவூ பெரியவர்' என்று கூறுவதைக் கேட்டு அந்த அப்பாவி பெருமிதமுறுவதாக முடிவடையும் குறுநாவலது. இன்றும் என் சிந்தையில் ஞாபகமிருப்பதொன்றே அதன் வெற்றி.

கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு' கல்கியில் தொடராக வெளிவந்த நாவல். கல்பனாவின் ஓவியங்களுடன் தொடராக வந்து பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாவலிது. இதுவுமொரு காதற்கதை. அம்மாவைப் போல் அழகேயுருவான நாயகன். அழகேயுருவான
காதலி. ஊரில் நிலபுலன்களைக் கவனிக்கப் பிரயாணம் செய்யும் நாயகன், அழகற்ற பெண்ணொருத்தியை (நிர்மலா) கொள்கை கருதித் திருமணம் செய்து, அது தோல்வியுற்று காதலித்த முன்னாள் காதலியைக் கைப்பற்ற முடியாமல், 'நீ நான் நிலா'வில் வருவதைப் போல் அவளின் தங்கையை மீண்டும் மணப்பதாக முடியும் கதை. இதில்வரும் நிர்மலா பாத்திரம் ஏனோ அகிலனின் சித்திரப்பாவையில் வரும் சுந்தரி பாத்திரத்தை நினைவூட்டும். மேற்படி மூன்று நாவல்களிலும் ('நீ நான் நிலா', 'சித்திரப்பாவை', 'தீராத விளையாட்டு') கதைப்
பின்னலில் ஒரு சில ஒற்றுமைகளிருப்பதால் ஒன்றை நினைத்ததும் உடனேயே மற்றவையும் உடனடியாக ஞாபகத்தில் வந்து விடுகின்றன.


இவற்றுடன் மீ.ப.சோமுவையும் மறந்து விட முடியாது. அன்றைய காலகட்டத்தில் அவரது அழகான வர்ணனைகளுடன் கூடிய தமிழில் வெளிவந்த 'கடல் கண்ட கனவு', 'நந்தவனம்', 'ரவிசந்திரிகா' ஆகியவற்றையும் குறிப்பிடத்தான் வேண்டும். உண்மையில் மேற்படி நாவல்கள் எமக்கு முற்பட்ட தலைமுறையில் வெளிவந்திருந்தாலும் எம் கைகளில் வாசிக்கக் கிடைத்தன. கொத்தமங்கலம் சுப்புவின் 'பொன்னி வனத்துப் பூங்குயில்' தொடரில் (கல்கியில் வெளிவந்தது) வரும் பொன்னியின் செல்வன் பூங்குழலியையொத்த நாயகியின் குறும்புச் சேட்டைகளும் அந்த வயதில் எமக்குச் சிரிப்பை வரவழைத்தன. ஜெகசிற்பியனின் சமூக மற்றும் சரித்திரக் கதைகளைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அவற்றில் 'கிளிஞ்சல் கோபுரத்தில்' வரும் சபலசித்தமும், பொறுப்புணர்வும் மிக்க கதாநாயகனுக்காகக் காலமெல்லாம் காத்திருக்கக் போவதாகக் கூறும் நாயகி சுகுணாவை எண்ணி அச்சமயத்தில் சிறிது கவலைப்பட்டதுமுண்டு. சரித்திரக் நாவல்களில் ஜெகசிற்பியன் பாவிக்கும் அழகிய வர்ணனைகளும் என்னைக் கவர்ந்ததுண்டு. குறிப்பாக 'நந்திவர்மன் காதலி', 'பத்தினிக் கோட்டம்' ஆகிய இரு சரித்திர நாவல்களும் பிடித்தவை. நா.பா.வின் சரித்திர நாவல்களில் வருவதைப் போல் இறுதியில் சோக முடிவினை ஜெகசிற்பியனின் நாவல்களிலும் எதிர்பார்க்கலாம். அன்றைய காலகட்டத்தில் அம்மா பாடசாலையிலிருந்து மு.வ.வின் அனைத்து நாவல்களையும் கொண்டு வந்து வாசிப்பதுண்டு. அச்சமயங்களில் அவற்றை நானும் எடுத்து வாசிப்பதுண்டு. இந்த வகையில் 'கரித்துண்டு' போன்ற நாவல்களைக் குறிப்பிடலாம். ஆனால் அந்தப் பருவத்தில் மு.வ.வின் 'வேண்டா' போன்ற தூய தமிழச் சொற்கள் எம்வாசிப்பின் ஆர்வத்தை அவ்வப்போது தடைசெய்வதுண்டு.

அப்பொழுதெல்லாம் கல்கி, விகடனில் வரும் தொடர்கதைகளெல்லாம் மிகவும் நீண்டவையாக, குறைந்தது மூன்று பாகங்களையாவது உள்ளடக்கியதாக இருக்கும். கல்கியின் மகன் கி.ராஜேந்திரன் அச்சமயத்தில் பல நீண்ட தொடர்கதைகளைக் கல்கியில் எழுதியுள்ளார். அவற்றில் அவரது 'போர்முனை' எம்மைப் பெரிதும் கவர்ந்த நாவல். அதில் வரும் விதவைப் பாத்திரமான நாயகி தாரா மனதில் நிலைக்கக் கூடியதொரு பாத்திரம். கல்கியின் மகள் ஆனந்தியின் 'மலைச்சாரல் மாதவி' இன்னுமொரு நினைவில் நிற்கும் நாவல். இவர்களைத் தவிர கோமகளின் 'இனிக்கும் நினைவுகள்', செல்வநாயகியின் 'குடைராட்டினம்' (இவையெல்லாம் கல்கியில் வெளிவந்த தொடர்கள்), சிவசங்கரியின் 'எதற்காக', இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்', இந்திரா பார்த்தசாரதியின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன', விந்தனின் 'பாலும் பாவையும்' , அநுத்தம்மாவின் 'கேட்டவரம்', பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்', சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே', தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே', பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாப்பாட்டித் தொடர்கள், சாவியின் 'வாஷிங்கடனில் திருமணம்', அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ', 'ரங்கோன் ராதா', கலைஞரின் வெள்ளிக்கிழமை ... எனக் கூறிக்கொண்டே போகலாம்.


இதே சமயம் என்னைக் கவர்ந்த சில சித்திரக் கதைகளையும் குறிப்பிடத்தான் வேண்டும். அவற்றில் முக்கியமானது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாடோடியின் 'கிங்கரனும் சங்கரனும்'. எழுத்தாளர் சங்கரன் எவ்விதம் காலனை சந்திக்கின்றார், எவ்விதம் அவரது
உயிரை எடுக்க வரும் கிங்கரர்களுடனெல்லாம் உறவாடுகின்றாரென்பதையெல்லாம் விபரிக்கும் சித்திரத் தொடர்கதை. சுவை மிக்க நகைச்சுவைச் சித்திரக்கதை. அன்றைய வயதில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு முக்கியமானவர் வாண்டுமாமா. என் காலத்துப்
படைப்பாளிகளெவரும் வாண்டுமாமாவை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. மிகவும் எளிமையாக, அழகாக, அழகான கண்ணையள்ளும் சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். கல்கியில் சிறுவர்களுக்காகவென்று ஒரு பகுதி 'சிறுவர் விருந்து'
என்னும் பெயரில் வெளிவரும். அதனைப் படிப்பதென்றால் அந்த வயதில் எனக்குப் பெருவிருப்பு. இவரது சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன. அவற்றிலொன்று 'ஓநாய்க்கோட்டை'. ஓவியர் வினுவின் அழகான சித்திரங்களுடன் வெளிவந்த அச்சித்திரக்கதையை நானும் என் சகோதரிமாரும், தம்பியும் போட்டிபோட்டுக் கொண்டு வாசிப்போம். அதில்வரும் தூமகேது என்றொரு பாத்திரம் அப்பொழுது எமக்கெல்லாம் பெரிதும் கிலியூட்டிய பாத்திரம். அம்புலிமாமா , கண்ணன், 'வெற்றிமணி', 'கண்மணி' இவற்றையும்
குறிப்பிடாமல் விடமுடியாது. இதே சமயம் மர்மக் கதைகளையுயும் நான் விழுந்து விழுந்து வாசிக்க ஆரம்பித்தேன். தமிழ்வாணனின் சங்கர்லால், தமிழ்வாணன் துப்பறியும் கதைகள், சுஜாதாவின் 'நைலான கையிறு' போன்ற கதைகள், 'கத்தி முனையில் இரத்தம்', 'அழகியின் கொலை' போன்ற 'பாக்கற் சைஸ்' துப்பறியும் நாவல்கள் (இவற்றைக் களவாக வாங்கி வாசிப்பேன். அட்டைகளில் அழகிகள் அன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் ஆபாசமான தோற்றங்களுடன் காணப்படுவதால்தான் இந்த பாதுகாப்பேற்பாடு). அன்றைய
வயதில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு மர்மக்கதை எழுத்தாளர் நாஞ்சில் பி.டி.சாமி. ராணியில் அவரது தொடர்கதைகள் வெளிவந்தன. நான் வாசித்த இவரது ஒரேயொரு தொடர்கதை ராணியில் வெளிவந்த சிவப்புச்சேலை'. இரண்டாவது
அத்தியாயத்திலிருந்தே வாசித்தேன். மாடியிலிருந்து விழுந்து விடும் நாயகின் மரணத்தை மர்மமாக வைத்துப் பின்னப்பட்ட கதை. இவரது இன்னுமொரு ராணியில் வெளிவந்த தொடர்கதை 'அழகியின் ஆவி'. ஆச்சியின் வீட்டிலுள்ள பரணில் கண்டெடுக்கப்பட்ட ராணி இதழ்கள் சிலவற்றில் ஒரு சில அத்தியாயங்களை வாசித்துவிட்டு வெறியுடன் பல நாட்கள் ஏனைய அத்தியாயங்களுக்காகவும் அலைந்து திரிந்து இறுதியில் ஏமாற்றத்துடன் 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' கதையாக மறந்து விட்ட கதையிது. என் பால்யகாலத்து நிறைவேறாத
ஆசைகளிலொன்று இது. இன்னுமொன்று சாண்டிலயனின் 'கடல்புறா' (இன்று நிறைவேறி விட்டது. ஆனால் அன்று..?). அடுத்தது கோவி.மணிசேகரனின் 'ராஜசிம்மன் காதலி'. தினத்தந்தியில் ஒரு சில அத்தியாயங்களை வாசித்து விட்டு 'அழகியின் ஆவி'யைப் போல்
தேடிச் சோர்ந்து இறுதியில் கைவிட்ட முயற்சி. இப்பொழுதும் கூட அவ்வப்போது நூலகங்களில் கோவியாரின் நூல்களைப் பார்க்கும்போது கண் இலேசாகத் தேடிப்பார்க்கும்.


மேற்படி நூல்களில் பெரும்பாலானவற்றை நான் கரைத்துக் குடித்ததது எனது பத்துக்கும் பதினாறுக்கும் இடைப்பட்ட பிராயத்தில்தான். இப்பொழுதும் இவற்றிலேதாவது நூல்களைக் கண்டால் வாங்கிச் சேகரித்து விடுவேன். ஆனால் இன்று வாசித்தால் ஒருசில
பக்கங்களுக்குமேல் தொடர்ச்சியாக வாசிக்க முடியாது. ஆனால் அன்றைய என் பால்ய காலத்ததுப் பருவத்தில் என்னை ஆட்டிப் படைத்தவை இவையென்ற வரலாறு இவற்றுக்கு உண்டென்பதால் என் வாழ்க்கைச் சரிதத்தில் தவிர்க்க முடியாததோர் அங்கமாக ஆகிப்போனவை இவை. இவற்றை இன்று என்னால் அன்று போல் வாசிக்க முடியாவிட்டாலும் இவற்றை எண்ணியதும் அல்லது பார்த்ததுமே என் நெஞ்சில் என் பெற்றோருடன், சகோதர சகோதரருடன், அன்றைய நண்பர்களுடன் எந்தவிதக் கவலைகளுமில்லாமல்
சிட்டுக்குருவிகளாகச் சிறகடித்த பால்யகாலத்தின் பதிவுகள், 'அழியாத கோலங்கள்' ஞாபகம் வந்துவிடுவதால் இவற்றை இனியும் என்னால் ஒதுக்க முடியாது. ஒவ்வொரு படைப்புக்கும் அது வெகுசன படைப்பாகவிருக்கட்டும் அல்லது சிறுவர் இலக்கியமாகவிருக்கட்டும்
எதுவென்றாலும் தீவிர இலக்கியத்தைப் போல் அவற்றிற்கும் ஒரு முக்கியத்துவமுண்டு. அவற்றைத் தாண்டித்தான் நாம் அனைவருமே அடுத்தகட்ட வாசிப்புக்கு எம்மைத் தயார்படுத்துகின்றோம். இவையெல்லாம் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத பருவங்கள்; படிக்கட்டுகள்.


இந்த என் பால்யகாலத்தில் என்னைப் பாதித்த திரைப்பட நடிகர்களைப் பற்றியும் கூறவேண்டும். உண்மையில் திரைப்பட நடிகர்கள் என்று குறிப்பிடுவது தவ்று. திரைப்பட நடிகர் என்றுதான் குறிப்பிட வேண்டும். வேறு யார்? நம்ம வாத்தியார்தான். நான் நினைவு தெரிந்து
பார்த்த முதல் நான்கு திரைப்படங்கள்: முதலாவது வாத்தியாரின் 'எங்க வீட்டுப் பிள்ளை'. இரண்டாவது வாத்தியாரின் 'ஆயிரத்தில் ஒருவன்'. மூன்றாவது வாத்தியாரின் 'கலங்கரை விளக்கம்'. நான்காவது ஏவி.எம்.ராஜனின் 'சித்திராங்கி'.


என்ன இவன் மட்டக்களப்புப் பயணத்தைப் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டு தன் பால்யகாலத்து வாசிப்பனுவத்தை விபரிக்கத் தொடங்கி விட்டானென்று பார்க்கின்றீர்களா? தவறுதான் அதற்கு என் அடுத்த பதிவுவரை பொறுத்திருங்கள்.

*** *** ***

*சுதந்திரனில்; வெளிவந்த என் முதற் சிறுவர் கவிதை கீழே.

பொங்கலோ பொங்கல்!

பொங்கல் பொங்கல் பொங்கலாம்.
புது வருடப் பொங்கலாம்.
எங்கும் எங்கும் சிறுவர்கள்
எலிவாணம் கொளுத்தி மகிழ்வார்கள்.

உலகைக் காக்கும் கதிரோனுக்கு
உலகைக் காக்கும் உழவர்கள்
பொங்கல் பொங்கிப் படைத்திடுவர்
பொங்கலென்னும் திருநாளில்.


2 comments:

Jayaprakash Sampath said...

அருமையான பதிவு. தொடர்கதையின் பெயர்களை எல்லாம் வாசித்ததில் இருந்து, நான் உங்களுக்கு அடுத்த தலைமுறை என்று தெரிய வந்தாலும், பழைய நினைவுகள் கிளம்பி விட்டன...

வ.ந.கிரிதரன் - V.N.Giritharan said...

தலைமுறை இடைவெளி இருப்பினும், பால்யகால நனவிடை தோய்தலென்பது எப்பொழுதுமே இனிமையானது தானே. பிரகாஷ் உங்கள் கருத்துகளுக்கு நன்றி.