Tuesday, August 01, 2006

ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'

ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவலின் கதைச்சுருக்கத்தினைப் பின்வருமாறு கூறலாம்: மிகவும் கேவலமான ஆசாபாசாங்களுடன் கூடிய கதாநாயகன் திரைப்பட இயக்குநர் ரவிகுமார்.எந் நேரமும் காமத்தில் உழன்று கொண்டேயிருக்கும் இவன் மிகவும் ஆழமாகவும் சிந்திப்பவன்.மிகவும் அற்பமாகவும் சிந்திப்பவன்.தன் கண் முன்னால் நான்கு முரடர்களால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்ட காதலி விமலாவைக் கோழையாகக் கைவிட்டவன். அவ்வுறவில் அவளும் ஆனந்தம் அடைந்திருக்க வேண்டுமெனக் கற்பனை செய்பவன். பல வருடங்களிற்குப் பின்னர் கன்னியாகுமரியில் படத் தயாரிப்பிற்கொன்றிற்காக தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகை பிரவீணாவுடன் தங்கியிருக்கும் இவன், நடிகையுடன் புணர்வதுடன், பெண்களைப் பாலியல் பண்டமாகவே கருதிய,கருதும் தனது மன உளைச்சல்களையெண்ணிப் போராட்டத்தில் சிக்கியிருக்கிறான். தனது பழைய காதலியான , தன்னால் கைவிடப்பட்ட படித்த விமலாவை கன்னியாகுமரியில் சந்திக்கிறான். அவளோ விடுமுறைகளில் படிக்காத ஆண்களாகத் தேர்ந்தெடுத்து ஊர் சுற்றுமொரு பெண்ணாக மாறியிருக்கிறாள். அமெரிக்காவிலிருந்து தனது கிரேக்க ஆண் நண்பனுடன் கன்னியாகுமரிக்கு வருகை தந்திருக்கின்றாள். அவளுடனான சந்திப்பு மீண்டும் இயக்குநர் ரவிகுமாரின் மனப் போராட்டங்களை அதிகரித்து விடுகின்றது. பல பெண்களுடன் உறவு வைத்திருந்த இவன் திருப்தியடைந்தது சைலஜா என்னுமொரு பெண்ணுடன் தான். தனது மனைவியுடனான உறவிலோ அல்லது நடிகை பிரவீணாவுடனான் உறவிலோ இவனால் சைலஜாவுடன் அடைந்ததைப் போல் திருப்தியினை அடைய முடியவில்லை. தனது முன்னால் காதலியுடன் ஒருநாளாவது 'அவளைப் புணர்ந்து, ஒருமுறை உச்சத்தின் வெறுமையில் எகிறிச் சுழன்றிறங்கச் செய்தால் போதுமெ'ன நினப்பவன் இவன். விமலா தனது படித்த செருக்கினைத் தன்முன்னால் காட்டுவதாக வெதும்புமிவன் அவளை அதற்காக 'தேவடியா நாயே, நான் போடறேண்டி சூப்பர்ஜீன்ஸ். வேஷமா போடறே. வேஷம் போட்டா பயந்துடுவேன்னு நெனைச்சியா? என்னை என்ன கேணையன்னு நினைச்சியா? வேஷம் போடு ஜெயித்திடுவியா?நான் ஜெயிக்கிறேன் உன்னை. உன்னை ஜெயிச்சாத் தான் எனக்கு சினிமா,. என் சினிமா உன் மார்புக்குள்ள இருக்குடி நாயே. சயிண்டிஸ்ட்டு. ...த்தூ..அமெரிக்காக்காரிது..உன்னைப் பிளந்து என் சினிமாவ வெளியே எடுக்கிறேண்டி..பாம்ப பிதுக்கி நாகமணிய எடுக்கிறேண்டி..' எனப் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட நடிகை பிரவீணாவிடம் புலம்புவன். அதே சமயம் நடிகை பிரவீணாவையும் ' சீ விளக்கப் போடுடி தேவடியா நாயே. என் எச்சிலத் தின்னுட்டு எங்கிட்டே படுக்கிற நாயி. நீ என்ன கேக்காம விளக்க அணைக்கிறியா? விளக்க போடுறீ..நாயே..' எனத் திட்டுபவன். தனது முன்னால் காதலியின் மேல் இருந்த ஆத்திரத்தின் காரணமாக அவளைப் பாலுறவிற்குட்படுத்திய கேடிகளிலொருவனான ஸ்டீபனையே தனது போலிஸ்கார நண்பனொருவனின் உதவியுடன் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து விமலாவின் முன்னால் நிறுத்துகின்றான். அவளோ இரு பெண் புத்திரிகளுடன் அல்லாடும் அவனது நிலைக்கு இரக்கப் பட்டு உதவி செய்யவும் முன்வருகின்றாள். இறுதியில் நடிகையும் கதாசிரியருடன் அவனை விட்டு ஓடிப் போய் விடுகின்றாள். காதலியும் அமெரிக்கா சென்று விடுகின்றாள். இவன் தனித்துப் போய் விடுகின்றான். இதுதான் கதைச் சுருக்கம்.

இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான 'கன்னிமை' என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார். ஜெயமோகனின் முன்னுரையினையும், நாவலில் ஆங்காங்கே விவரிக்கப் படும் கன்னியாகுமரி பற்றிய விளக்கங்களையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் இந்த நாவலை நிச்சயமாக ஒரு 'ஆபாச இலக்கியம்' என்னும் பிரிவிற்குள் இலகுவாக அடக்கி விடலாம். அப்படி விடாமல் ஜெயமோகனின் மேற்படி முன்னுரையும், கன்னியாகுமரி பற்றிய தத்துவ விளக்கங்களும் நம்மைத் தடுத்து விடுவதால் நாவலைப் பற்றிச் சிறிது ஆராய வேண்டிய நிலைமைக்கு நம்மைத் தள்ளி விட்டு விடுகின்றன.

கன்னியாகுமரியைப் பற்றி நாவலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகின்றன. உதாரணத்திற்குப் பின் வருவனவற்றினைக் குறிப்பிடலாம்:

" 'கன்னியாகுமரியோட ஐதீகம் தெரியுமில்லையா?'

'தெரியும்.'

'தேவியைத் தாலிகட்ட ஸ்தாணுமாலயன் கிளம்பினார். பிரம்மாவும் விஸ்ணூவும் சிவனும் ஒன்றான மூர்த்தி. படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது கிரியாசக்தியே அவன் தான். ஆனா வந்து சேரலை. வரப் போவதுமில்லை. தேவி இந்தக் கடல் முனையில் கன்னியா காத்திருக்கா. யுகயுகமா. இன்னும் எத்தனையோ யுகங்களுக்கு எத்தனை பெரிய தனிமை, எத்தனை உக்கிரமான காத்திருப்பு இல்லையா?'

'ஆமா.'

'இதை நாம கடல்னு சொல்றோம். ஆனா இது கடல்கள். மூணு கடல்கள் ஒண்ணோடொண்ணு மோதிக் கலந்து கொந்தளிச்சிட்டிருக்கு. எனக்குத் தோணுது உள்ளே ஆழத்தில அந்தக் கடல்களோட உக்கிரம் இன்னும் அதிகமா இருக்கும்னு. அதி பயங்கரமான மெளனத்தில் ஒரு துளி அசைவு கூட இல்லாம மூணு பிரமாண்டங்களும் மோதி உச்சக் கட்டத்திலே அப்பிடியே நின்னுட்டிருக்கும்னு. யுகங்களா அந்த உச்சக் கட்டம் நீண்டு நீண்டு போயிட்டிருக்கு.' [பக்கங்கள்: 26,27] "

" 'கன்னித்தன்மைதான் இங்க தேவியோட அழகு. ஆனா சாதாரண கன்னி இல்லை. காத்திருக்கிற கன்னி. ஒரு நாளைக்கும் முடியாத காத்திருப்பு. ரெண்டையும் சேத்து யோசித்தாத்தான் நாம தேவியைப் புரிஞ்சு கொள்ள முடியும்.' [பக்கம் 28 ]
"

இவற்றிலிருந்தும் நாவலின் சம்பவங்களிலிருந்தும் சில உண்மைகள் வெளிப்படுகின்றன. ஒன்று நாவலில் வரும் பாத்திரங்களெல்லாம் நடைமுறையில் நிலவும் கற்பு பற்றிய ஐதீகத்தினை உடைத்தெறிந்து காமத்தில் மனம் போனபடியெல்லாம் சுகித்து வாழுகின்றார்கள். அதே சமயம் இச்சம்பவங்கள் நடைபெறும் சூழலோ கன்னித்தன்மையினைப் பேணி யுகயுகமாய்க் காத்திருக்கும் கன்னித்தெய்வம் குடியிருக்கும் கன்னியாகுமரியில். இதன் மூலம் ஜெயமோகன் கற்பு பற்றிய கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கின்றாரென்று கூறலாமா? அவ்விதம் கேள்விக்குறியாக்குவதற்கு நாவல் முழுக்க நாயகனின் நடிகையுடன், ஏனைய பெண்களுடனான காமச் சல்லாபங்களை விபரித்திருக்க வேண்டிய தேவை தேவைதானா? கற்பு என்னும் கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கிய படைப்புகளில் காலத்தால் முந்தியது இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம். திரெளபதி என்னும் பாத்திரம் மூலம் , சூரிய பகவானிற்குப் புத்திரனைப் பெறும் குந்தியென்னும் பாத்திரம் மூலம், இராமயணத்தில் கூட 'அசோகவனத்தில்' நெடு நாட்கள் தங்கியிருந்து திரும்பிய சீதாப் பிராட்டி மூலம் ஏற்கனவே கேள்விக்குறியாகியதொரு விடயத்தினைத் தான் 'கன்னியாகுமரியும்' செய்கிறதென்று ஜெயமோகன் கூறுகின்றாரா? [ஜெயமோகன் தனது அடுத்த நாவல் 'அசோகவனம்' எனக் கூறுகின்றார். இத்தகையதொரு நவீன சீதாப் பிராட்டியினைப் படைத்து சில கேள்விகளை எழுப்ப உத்தேசித்திருக்கிறாரோ தெரியவில்லை.]ஜெயகாந்தன் ஏற்கனவே 'அக்கினிப் பிரவேசம்' என்ற குறு நாவலிலும் அதன் தொடர்ச்சியான 'சில நேரங்களில் சில மனிதர்களென்'ற 'காலங்கள் மாறும்' நாவலிலும் , 'ரிஷி மூலம்' குறு நாவலிலும் மிகவும் தீவிரமாக அதே சமயம் மிகவும் நாசூக்காக இக்கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார். புதுமைப் பித்தனும் 'பொன்னகரமென்'ற இருபக்கச் சிறுகதையில் மிகவும் ஆக்ரோசமாகக் கேள்விக் குறியாக்கியிருக்கின்றார். 'பாலும் பாவையில்' விந்தன் அகல்யா என்னும் பாத்திரம் மூலம் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார். மு.வரதராசனாரின் 'நெஞ்சின் ஒரு முள்' நாவலும் இவ்விடயத்தினைக் கேள்விக்குரியாக்கிய படைப்புகளிலொன்றுதான். இவ்விதமாகப் பல படைப்புகளைக் கூற முடியும். ஜெயமோகனும் தன் பங்கிற்கு 'கற்பு' பற்றிய கோட்பாடு பற்றி கேள்வியெழுப்புவதாக இந்நாவலைக் கூற முடியுமா?

ஒரு நாவலைப் படித்து முடியும் போது அப்படைப்பானது படிப்பவரிடத்தில் எத்தகையதொரு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றதென்பதிலேயே அப்படைப்பின் வெற்றி தங்கியுள்ளது. புதுமைப் பித்தனின் 'பொன்னகரத்தி'னைப் படித்து முடிக்கும் போது வருவதென்ன? அம்மாளு செய்த காரியத்திற்காக யாரும் அவளைக் காறித்துப்புவதில்லை. மாறாக அவளது நிலையுடன் ஒப்பிடும் பொழுது கற்பு பற்றிய கோட்பாடே பின்னுக்குத் தள்ளப்பட்டுப் போய் விடுகிறது. அவளை இந்நிலைக்கு ஆளாக்கி விட்ட சமுதாயத்தின் மேல் சீற்றம் வருகின்றது. ஒரு பணக்கார இளைஞனின் காமத்திற்குத் தன்னை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் இழந்து விட்ட பாடசாலை மாணவியான கங்காவிற்கு அவளது தாயார் தண்ணீர் வார்த்து அக்கினிப் பிரவேசம் செய்யும் போது ஜெயகாந்தன் என்ன இலாகவமாக இக்கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கி விடுகின்றார். ஆனால் மேற்படி 'கன்னியாகுமரி' நாவலில் வரும் நாயகன் இயக்குநர் ரவிகுமாரின் வக்கிரமான மன ஓட்டங்களை நாவல் முழுக்க வாசித்து முடிக்குமொருவரிற்கு வரும் உணர்வுகளென்ன? ஒரு மூன்றாந்தர பாலியல் நாவலொன்றினை வாசிக்கும் போது ஏற்படும் மன உணர்வுகளைத் தவிர வேறேதாவது உனர்வுகள் வருகின்றதா? நாவலின் முன்னுரையில் ஜெயமோகன் பின்வருமாறு கூறுகின்றார்:

" இன்று தனிமனிதன் முதன்மைப்பட்டு சமூகம் இரண்டாம்பட்சமாகி விட்டது என்று மிகப் பொதுப்படையாகக் கூறலாம். தனி மனித அறம், தனி மனித உண்மை, தனி மனித உன்னதம் ஆகியவை முக்கியமாகிவிட்டன. இந்த நூறு வருடங்களில் உலகம் முழுக்க எழுதப் பட்ட இலக்கியப் படைப்புகளில் பொது அம்சமாக காணப்படுவது இந்தப் போக்கே என்பது என் புரிதல். ஒவ்வொரு தனி மனிதனும் அவனுடைய வாழ்வில , அவனுக்குச் சாத்தியமான உச்சங்களை நோக்கி நகர்வதென்பதே இந்த யுகத்தின் இலட்சிய இயங்குமுறை. அந்நகர்வின் போக்கில் பிறருக்கு ஊறு விளைவிக்கத படி, பிறரைத் தடை செய்யாதபடி ( அல்லது அங்கீகரித்த தடைகளை மட்டும் அளித்தபடி ), அவன் செயல்பட வேண்டுமென்ப்தே இன்றுள்ள ஒழுக்க நெறிகளின் சாரம் என்று படுகிறது. இந்நாவலை இத்தகைய புது ஒழுக்கமொன்றை நோக்கிய தேடல் என்று கூறலாம்."

ஆனால் இந்நாவலில் வரும் நாயகன் நடை முறைகளெல்லாம் பிறரை அவமானப் படுத்துவையாகவல்லவா இருக்கின்றன. எடுத்ததற்கெல்லாம் 'வாயை மூடு தேவடியா நாயே' என்று வசை பாடுபவனாகவிருக்கின்றான். ஏற்கனவே இவன் இயக்கிய 'ஏகயாய ராஜகுமாரி' யிலேயே இவன் உச்சத்தினை அடைந்து விட்டதாகக் கூறி நடிகை பிரவீண இன்னுமொருவனுடன் சென்று விடுகின்றாள். இவனோ தனது முன்னால் காதலியுடன் புணர்ந்து உச்சத்தினை அடைய வேண்டுமென நினைப்பவன். ஜெயமோகன் கூறலாம். இந்நாவல் ஒரு குறியீட்டு நாவலென்று. கன்னியாகுமரி பற்றியும், ஒரு சில இந்து சமய தத்துவங்கள் பற்றியும் ஆங்காங்கே தூவி விடுவதால் மட்டும் இத்தகைய குறியீட்டு நாவல்களைப் படைக்க முடியுமென்றால் எமது 'அழகியின் ஆவி'யினைப் படைக்கும் மர்மக் கதை மன்னர்களெல்லாம் இத்தகைய குறியீட்டு நாவல்களைப் படைக்கத் தொடங்கி விடுவார்கள்.

'அல்பேர்ட் காம்யூ'வின் 'அன்னியன்' நாவலில் வரும் நாயகனின் நடைமுறைகளில் ஒரு வித அன்னியத் தன்மை தென்படும். தாயாரின் மரணச் செய்தியினை மேலதிகாரியிடம் கூறி வேலைக்கு விடுமுறை எடுப்பதற்கே தயங்குவானவன். அத்தகையதொருவிதமான அன்னியத் தன்மை இந்நாவலின் நாயகனிடத்திலும் காணப் படுகின்றது. அவ்விதம் காணப்பட்டாலும் இப்பாத்திரம் படைக்கப் பட்ட விதம் இந் நாவலின் நோக்கமான 'இந்நாவலை இத்தகைய புது ஒழுக்கமொன்றை நோக்கிய தேடல் என்று கூறலாம்' என்று கூறும் ஜெயமோகனின் நோக்கத்தினைச் சிதைத்து விடுகின்றது. ஏற்கனவே கூறியது போல் படைப்பானது படித்து முடித்ததும் வாசகரிடத்தில் எழுப்பும் உணர்வினைப் பொறுத்தே அதன் வெற்றி தங்கியுள்ளது. அந்த வகையில் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' ஒரு வெற்றிகரமான படைப்பாயென்றால் அது ஒரு கேள்விக்குறிதான்.

நன்றி: திண்ணை.காம், பதிவுகள்.காம்

3 comments:

ரவி said...

நன்றி...ஆனால் சில வார்த்தைகளை எடிட் செய்திருக்கலாம்..

SnackDragon said...

அன்பின் வ.ந.கி,

வலைப்பதிவுக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள். பதிவுகள்.காமில் உங்கள் கருத்து சுதந்திரமும், வெளிப்படையான விவாதங்களுக்கும், படைப்பாளிகளின் மீதான கரிசனங்களுக்கும் என்றும் எங்களில் சிலர் நன்றியுடையவர்களாக இருப்போம்.

வருக.

வ.ந.கிரிதரன் - V.N.Giritharan said...

நண்பரிகளிருவரினதும் கருத்துகளுக்கும், வரவேற்புக்கும் மற்றும் பாராட்டுகளுக்கும் நன்றி. பெயரில் 'செந்தழ'லினை வைத்துக் கொண்டே சொற்களில் தண்மையினைக் காட்டச் சொல்கிறார் செந்தழல் ரவி. நண்பர் அத்தகைய சொற்களைக் குறிப்பிட்டிருந்தால் நன்றாகவிருக்கும். நண்பர் குறிப்பிட்ட சொற்கள் என்னால் எழுதப்பட்டவையா அல்லது நாவலாசிரியரால் எழுதப்பட்டவையா?

கணித்தமிழுக்கு இணைய இதழ்கள் வரிசையில் இன்று வலைப்பூக்களும் முக்கிய பங்காற்றி வருகிறது மகிழ்ச்சியினைத் தருகிறது. கணித்தமிழுலகுக்குத் தமிழ் வலைப்பூக்களும் ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான நல்வரவே.