Tuesday, July 18, 2006

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு

முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர்.
ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா!
உனக்குத்தான் அனுப்புகின்றேனிச்
செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.
எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு
தானிருக்கின்றாய்.
ஆம்! வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் ,
குகைகளில்
அல்லது கூதற்குளிர்படர்வரைகளில்
உன் காலத்தின் முதற்படியில்...
அல்லது விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை போர்களினாலுந்தன்
பூதலந்தனைப் பொசுக்கிச் சிதைத்தபடி
அறியாமையில்...
ஒருவேளை அதியுயர் மனத்தன்மை
பெற்றதொரு அற்புதவுயிராய்...
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
'புரியாத புதிர்தனைப்
புரிந்தவனாய் நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின் அதையெனக்குப்
பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர் அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான் அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன்.
ஆயினும் அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்! அது போதும்!

நன்றி: திண்ணை.காம், பதிவுகள்.காம்
ngiri2704@rogers.com

No comments: